June 21, 2025

பரிசல் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள பரிசல் சவாரி செய்வதற்கான டெண்டர் மாவட்ட நிர்வாகத்தால் ஏலம் அறிவிக்கப்பட்டது. இந்த ஏலமானது பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் ரூபாய் ஒரு கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் ஏலம் போனது.

ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டுவதற்காக 400 பரிசல் ஓட்டும் தொழிலாளர்கள் உள்ளனர். பரிசல் துறை டெண்டரை கடந்த ஆண்டு பரிசல் ஓடிகளே எடுத்திருந்த நிலையில் கடந்த ஆண்டு தண்ணீர் வரத்து அதிகரிப்பாலும், தமிழக சுற்றுலா துறை மூலம் பரிசல் துறை 18 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணி நடைபெறுவதால் போதிய வருவாய் இன்றி நஷ்டம் ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

எனவே இந்த ஆண்டு பரிசல் துறை டெண்டர் பரிசல் ஓட்டிகளாகிய தங்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்ததாகவும் ஆனால் இந்த டெண்டர் தங்களுக்கு வழங்கப்படாமல் தனியாருக்கு வழங்கியதை கண்டித்தும் இன்று ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் ஓட்டிகள் பரிசலை ஓட்டாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஆ.இர.விஜயஷங்கர்

ஆசிரியர்- போர்முனை