June 21, 2025

ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை

வாணியம்பாடி, ஜூலை.30- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் – ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஆம்பூர் மற்றும் நாய்க்கனேரி காட்டுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்த காட்டு யானை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூர் காட்டுப்பகுதிக்கு வந்தது, தொடர்ந்து அந்த யானை நேற்று மாலை ஜமுனாமரத்தூர் – காவலூர் சாலையில் திடீரென வேகமாக நடந்து வந்தது.

அப்போது நேற்று ஆடி கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முருகர் கோவிலுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களில் சென்றனர், திடீரென காட்டு யானை சாலையில் வருவதை கண்டு அவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்த ஆலங்காயம் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையை பட்டாசு வெடித்து காட்டு பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆ.இர.விஜய ஷங்கர் 
ஆசிரியர் - போர்முனை