October 6, 2025

தனியார் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய போதை நபர். அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பரபரப்பு

அறந்தாங்கி ஜூன் 18

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற நேரத்தில் போதை நபர் பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டது.
கார், சிக்கன் நூடுல்ஸ் கடை சேதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த KBL தனியார் பேருந்தை கிடங்கிவயல் பகுதியை சேர்த்த ரகு என்ற இளைஞர் போதையில் பேருந்து நிலையத்திலிருந்து கட்டுமாவடி முக்கம் வழியாக ஓட்டிச் சென்று எல்என்புரம் பகுதியில் நின்று கொண்டிருந்த கார் மற்றும் சிக்கன் நூடுல்ஸ் கடை மீது மோதி வாகன விபத்து ஏற்படுத்தி உள்ளார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக பேருந்தை இயக்கிய நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஆவுடையார்கோவில் தாலுகா கிடங்கிவயல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ரகு (வயது 32)
என்று தெரிய வந்தது.

அவரிடம் விசாரணை செய்ததில் பேருந்து நிலையத்தில் சாவியை வண்டியிலேயே வைத்ததால் எனக்கு பேருந்து ஓட்ட ஆசையாக இருந்தது. அதனால் ஓட்டி வந்தேன் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் அறிந்த அறந்தாங்கி காவல்துறையினர் மது போதையில் இருந்த நபரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் பேருந்துகளை நிறுத்தும் பேருந்து ஓட்டுனர்கள் சாவியை எடுத்து பத்திரப்படுத்தினால் மட்டுமே இது போன்ற விபத்தை தடுக்க முடியும். குறிப்பாக ஐந்து மாதங்களுக்கு முன்பு அறந்தாங்கி பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை மனநிலை பாதிக்கப்பட்ட நபர் 50 கிலோமீட்டர் தூரம் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.